Saturday, October 13, 2018

இராமாயணம் - சில கருத்துகள்

இராமபிரான் முதலில் முடிவு கட்டியது பரசுராமரின் செருக்கை; இறுதியாக முடிவு கட்டியது இராவணனின் செருக்கையும், வாழ்வையும். இருவருமே பிராம்மணர்கள்.

வேட இனத்தவரான குஹனையும், சபரியையும் ராமாயணம் சிறப்பித்துச் சொல்கிறது. தொண்டிலும், அன்பிலும் உயர்ந்த குகனை 'குகப்பெருமாள்' ஆக்குகிறது வைணவம். ’சபரீமோக்ஷ ப்ரதாயக’ என்றில்லாமல் ’சபரீமோக்ஷ ஸாக்ஷிபூத’ என்கிறார் ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகன். சபரிக்குக் கிடைத்த பெரும்பேற்றை ஸத்குரு தியாகையாவும் வியந்து போற்றுவார். அந்த அளவு சபரியின் தகைமை மிக உயர்ந்து விளங்குகிறது. வனவாச நியமமாக அர்க்ய - பாத்யங்களுக்குமேல் வேறு எதையும் அந்தண முனிவர்களிடத்தும் கைநீட்டிப் பெறாத அண்ணல் சபரி அளித்த கனிகளை மட்டும் ஏற்கிறார்.

இராவணன் பிறப்பைச் சங்க இலக்கியம் சொல்லவில்லை; வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம் விரிவாகச் சொல்கிறது, அதுவும் முனிவர்கள் வாயிலாக. ஸ்ரீ ராமாயணத்துக்கான மறு பெயர் ‘பௌலஸ்த்ய வதம்’ என்பதே.

ஸப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்த்யரின் வழித்தோன்றல் முனிவர் விச்ரவஸ்; அவர்தம் புதல்வன் வைச்ரவணன் [குபேரன்] யக்ஷர்களுக்குத் தலைவனாகச் செல்வாக்கோடு திகழ்வதைப் பார்க்கிறான் ஸுமாலி எனும் அரக்கன். ஸுமாலி, ஸுகேசன் என்ற அரக்கனின் புதல்வன்; மால்யவானுக்குத் தம்பி. [ இந்த மால்யவானின் கடுமையான எச்சரிக்கைகளை இராவணன் அசட்டை செய்தது பின்னால் நடந்த நிகழ்ச்சி] ஸுமாலி, தன் மகளான கைகஸியிடம் முனிவர் விச்ரவஸை வலியச்சென்று வரித்து மக்கட்பேற்றை அடையுமாறு அறிவுறுத்துகிறான். அவளும் அவ்வாறே செய்கிறாள்.

முதலில் பிறந்தவன் தசக்ரீவன்- ராவணன்; பின்னர் கும்பகர்ணன், ஸூர்ப்பணகை,விபீஷணன். தவத்தால் அவர்கள் வலிமை பெறுகின்றனர். ராவணன் குபேரனின் லங்காபுரியையும் , புஷ்பக விமானத்தையும் கைப்பற்றுகிறான். ராவணன் மகளிரைப் பல இடங்களிலிருந்தும் கவர்ந்து வந்து தன் அந்தப்புரத்தில் சேர்க்கத் துணை புரிகிறது இந்த விமானம்.

இராவணன் பிறந்த ஊர் ‘பிஸ்ரக்’ [நொய்டா அருகில்] என்றே வடபுலத்தவர் இன்றும் நம்புகின்றனர்; விச்ரவ என்பதன் திரிபு ‘பிஸ்ரக்’. அங்கு அவனுக்கு ஓர் ஆலயம் அமைந்துள்ளது -
https://en.wikipedia.org/wiki/Bisrakh

இராவணன் தென்னிந்தியன் - திராவிடன் என்பதை வடபுலத்தவர் ஏற்பதில்லை; குபேரனின் இலங்கை தனக்கு வசப்பட்டபின் அரக்கச் சுற்றத்துடன் ராவணன் நிலையாக அங்கு வாழத்தலைப்பட்டதால், அவன் தென்னகம் சேர்ந்தவனோ எனும் ஐயம் ஏற்படுவது இயல்பே. புலமையும், நூலறிவும் வாய்க்கப்பெற்ற இராவணன் செய்த ’ராவண ஸம்ஹிதை’ வடபுலத்தில் புகழ் பெற்ற நூல்.

’திராவிடர் எனத் தென்னகம் சார்ந்த ஓர் இனம், அவர்களையே அரக்கராகச் சித்திரிக்கின்றனர்’ எனும் கருத்தியல் உண்மையா ?

தாடகை - ஸுபாஹு - மாரீசர்கள் வாழ்ந்ததும் வடபுலத்தில்; இலவணன் என்ற அரக்கன் வடபுலத்தின் மதுவனத்தில் வாழ்ந்ததாக இராமாயணம் கூறுகிறது. சத்ருக்னர் இவனை அழிக்கிறார். அரக்கர் பலர் வாழ்ந்தது தண்டக வனத்தில்.

ராவணன் பெற்ற வெற்றிகள் பல; தோல்வியடைந்த ஸந்தர்பங்களும் உண்டு; சமாதான உடன்படிக்கைகளும் இதில் அடக்கம். அவன் தண்டகவனத்தின் ஒரு பகுதியான ஜனஸ்தானத்தில் outpost ஒன்றை அமைக்கிறான், கர - தூடணர் தலைமையில். அது தவிரத் தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி - பொருநை நதி தீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. இராமபிரான் ஜனஸ்தான அரக்கரை மாய்த்தபின் [கோதாவரி தீரம்] , தேவியைத் தேடிக்கொண்டு தென்திக்கில் செல்லும்போது இடர்செய்த கபந்தனை மாய்த்தபின் தென்னகத்தில் அரக்கர் எவரையும் வதை செய்யவில்லை. அரக்கர் வதைப் படலம் பின்னால் இலங்கையில்தான் மீண்டும் தொடர்கிறது. ஆக, அரக்கர் தென்னகம் சார்ந்த திராவிடர் எனும் பரப்புரை பொருளற்ற புலம்பலாகி விடுகிறது.

தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான power balancing நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள். ரஜோ குணமும் , ஆயுத வலிமையும் ஒரே இடத்தில் குவிந்தால் அரக்கத் தன்மை மிகுதியாகும். இதைச் சமன் செய்யுமுகமாகப் பெருமான் வஸிஷ்ட - விசுவாமித்ரர் தொடக்கமாக முனிவர்களிடமிருந்து அஸ்த்ர - சஸ்த்ர ப்ரயோகங்களை அறிந்து கொண்டார்; மிகுந்த வேகத்தோடு செருக்குற்றுத் திரிந்த பரசுராமரை, விவேகத்தோடு அமைதியான முறையில் அடக்கி, மீண்டும் அவரைத் தவம் புரியுமாறு செய்ததும் ஒரு சமன்பாட்டு நடவடிக்கையே.

உலக இன்பங்களைத் துய்க்க வேண்டிய இளம் பருவத்தில் எதிர்பாராதவிதமாக மிகக்கொடிய பதினான்காண்டு வனவாச தண்டனை தம்மீது திணிக்கப் பட்டபோதும், சற்றும் நிலை குலையாமல் , அதையே தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக ஏற்றுக்கொள்கிறார் ஐயன்.

அண்ணல் வனமேகும் போதும் ஆயுதங்களோடுதான் சென்றார். சித்ரகூடத்திலிருந்து கிளம்பிய தசரத குமாரர்கள் நேராக மிகக் கொடிய, அடர்ந்த வனமான தண்டக வனத்தில் புகுந்ததும் இதே நோக்கத்தோடுதான்-
ப்ரவிஶ்ய து மஹாரண்யம்
தண்டகாரண்யம் ’ஆத்மவாந்’ |
ராமோ ததர்ஶ ’துர்தர்ஷ:’
தாபஸ ஆஶ்ரம மண்டலம் ||

தண்டகாரண்யம் செல்லும் அண்ணலுக்கு வால்மீகி 'ஆத்மவாந்’, ‘துர்தர்ஷ:’ எனும் இரண்டு அழகான, மிகப்பொருத்தமான அடைமொழிகள் தந்துள்ளார். உயிர்மேல் ஆசை கொண்டவன் தண்டகவனம் புகத்துணியமாட்டானாம்.
அங்கு தங்கிய அண்ணல், உலகியல் தொடர்பின்றி அருந்தவமியற்றும் அறவோர்க்குத் துணையாக அரக்கரை மாய்த்து, ஸத்வ குணம் பெருக வழி கோலினார். அகத்தியரிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டார். [அஸ்த்ர - சஸ்த்ரங்கள் அரசர்க்குரியவை; அஸ்த்ரம் - எதிரிமேல் எறிந்து தாக்கும் ஆயுதங்கள்; சஸ்த்ரம் - கையில் வைத்துக்கொண்டே போர் செய்வதற்கானவை, வாள், கதாயுதம் போன்றவை] ராவண வதமானபின் ஆற்றல் சமன்பாடு முழுமையான பின்னரே அண்ணல் அரியணை ஏறுகிறார். அரியணை பெற்றுப் பெருவலிமை தம்மிடம் சேர்ந்த பின்னரும் எதையும் துஷ்ப்ரயோகம் செய்யவில்லை இறுதிவரை.

எதிரிகளே இல்லை எனும் சூழல்; ஆற்றல் வாய்ந்த உடன்பிறந்தோர்.எல்லையில்லாத தோள்வலிமை. உறுதுணையாக சக்தி வாய்ந்த படைக்கலன்கள். உலகமே ‘ராஜாராமன்’ எனப் பலவாறாகப் போற்றி நிற்கும்போதும்,இராமபிரான் தம்மை ஒரு தேசத் தொண்டனாகவே கருதிக்கொண்டு பக்தன் செய்யும் தெய்வ உபாசனைபோல் தம் நாட்டையே தெய்வமாக உபாசித்ததாக வால்மீகி பகவான் கூறுகிறார் -
ராமோ ராஜ்யமுபாஸித்வா
ப்ரஹ்மலோகம் ப்ரயாஸ்யதி ||

சமய குரவர் இராவணன் தேவியை வவ்விய அடாத செயலைக் கண்டிக்கின்றனர்; ஆழ்வார்கள் அந்த அளவு பழித்துள்ளனரா, சந்தேகம்தான்.

********************************************************************
சமய நூல்களின் மையக் கருத்து -
சிச்ந - உதர ப்ரதானமான [இடுப்புக்குக் கீழே தொங்கும் உறுப்பையும், இடுப்புக்கு மேலுள்ள வயிற்றையும் பேணும்] போக்கை ஒருவன் கைவிட வேண்டும்.

இழிசெயலில் ஈடுபடுபவன் தேவனே ஆனாலும் அவன் பழிப்புக்குரியவன். ஆற்றல் மிக்க இந்திரனைப் புகழும் மறை ‘அஹல்யா ஜார ! கௌதம ப்ருவாண!!’ என
அவனைக் கேலி பேசுகிறது.

பெண் பித்தனாயினும் ராவணனது சிவ பக்தி போற்றுதற்குரியதாகிறது; சிவ பூஜையின் முடிவில் நந்தி - சண்டேசர்களுக்கு நிகராக ராவணனும் சிவ நிர்மால்யம் பெறும் தகுதி படைத்தவனாகிறான் -
பாண ராவண சண்டேச நந்தி ப்ருங்கிரிடாதய: |
மஹாதேவ ப்ரஸாதோSயம் ஸர்வே க்ருஹ்ணந்து சாம்பவா: ||

ஆஞ்ஜநேயரும், பீஷ்மரும் நமக்கு முன் மாதிரிகள்.
ஊர்த்வ ரேதஸ்களான மஹான்கள் பலர் செய்த போதனைகள் நம் உள்ளத்தில் தங்கியுள்ளதால்தான் உள்ளீடற்ற மேற்கத்திய மேனி மினுக்கி சமயக் கருத்துகள் நம்மைக் கவர்வதில்லை.

|| ஜய் ஸ்ரீராம் ||