Friday, September 13, 2013

பகவந்நாமம்



ஸ்ரீ பகவந் நாமாம்ருத ரஸோதயம் என்பது ஸ்ரீபகவந் நாம போதேந்திர ஸரஸ்வதி செய்த அற்புதமான நூல். முழுக்க முழுக்க பகவந் நாமத்தின் மகிமையை ஆசாரியர்கள் ரிஷிகள் முனிவர்கள் ஆகியோரின் வாக்குகளைக் கொண்டு நிர்ணயிக்கிறார் ஸ்ரீ போதேந்திரர். (இந்த நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள்).

கடவுளின் நாம இயக்கத்தின் மகிமை என்னவென்றால் எவ்வளவோ,
ஆனால் கண்ணுக்குத் தெரிந்து சொல்ல வேண்டும் என்றால், ஜாதியினால்
ஏற்படும் பிரிவினைப் பார்வையை அடித்துக் கீழே வீழ்த்துகிறது.
பக்தி என்னும் உள்ளத்தின் எழுச்சியில் மனிதர்களின் அஹங்காரம்
தீனியாகக் கேட்கும் பல திமிர்த்தனங்களை எரித்த கயிறாக ஆக்குகிறது.
கடவுளின் நாமத்தில் ஈடுபட்ட உள்ளத்தரான பக்தர்களிடத்தில் உயர்வு தாழ்வு
பார்ப்பவன் அருநரகு அடைவான் என்ற நிர்தாட்சண்யமான செய்தியை
அஞ்சாமல் அமுல்படுத்திப் பார்த்த இயக்கம் எது என்று பார்த்தால் இந்த
இறைவனின் திருநாமத்தில் உள்ளம் உருகும் ஈடுபாடு என்ற நாம ஜபம்,
கீர்த்தனம் என்ற இயக்கம்தான். ஓரிடத்தில் என்று இல்லாமல் பாரதம்
நெடுக இந்த நாம சங்கீர்த்தனம் பரவத் தொடங்கிய பிறகுதான் நம் சமுதாயத்தைப் பிடித்த கலிக்குக் கொஞ்சமாவது கிலி பிடிக்க ஆரம்பித்தது.

"நாவலிட் டுழிதருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே நின் நாமம கற்ற
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமா நகருளானே!" என்று பாடுகிறார் ஆழ்வார்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதர்கள் தமது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யத்தில்
அசைக்க முடியாமல் நாம சித்தாந்தமே செய்கிறார். அவர் செய்த நாம சித்தாந்தப் பகுதியை அழகாகச் சுருக்கித் தருகிறார் தமது ஸ்ரீபகவந் நாம ரஸோதய நூலில் ஸ்ரீ போதேந்திரர்.

"வசமிழந்து நாமகீர்த்தனம் செய்தாலும் சிம்மத்தைக் கண்ட மிருகங்கள் போல்
பாபங்கள் ஓடிவிடும். நாமகீர்த்தனமே குப்பைகளை அக்னிபோல் எல்லா பாபங்களையும் பொசுக்கிவிடும். நரகத்தைத் தரும் மிக உக்கிரமான கலிகல்மஷம் ஒருதரம் செய்த நாமஸ்மரணத்தாலேயே (கடவுள் நாமத்தின் நினைவு) நாசமாகும்.”

" தெரிந்தோ தெரியாமலோ வாஸுதேவ கீர்த்தனம் செய்தால் தண்ணீரில் பட்ட உப்புப்போல் பாபம் கரைந்துவிடும். ஒருதரம் கோவிந்தநாமத்தைச் சொன்னாலும் பலபிறவிகளில் செய்த பாபங்கள் அனலில்பட்ட பஞ்சு போல் பொசுங்கிப் போகும். ”

" ஹரி” என்ற இரண்டு எழுத்தை ஒருதரம் உச்சரித்தவன் கூட மோக்ஷத்திற்காக மூட்டை கட்டிவிட்டான்.

"'நாராயண' என்ற நாமம் இருக்கிறது. வாக்கும் வசமாக இருக்கிறது. அப்படியிருந்தும் மக்கள் நரகில் விழுகின்றனரே! என்பதுதான் அதிசயம். நரகவேதனைப் படும் ஜீவனைப் பார்த்து யமன் கேட்கிறானாம், 'ஏனடா! நீ கேசவனை பூஜிக்கவில்லையா? இங்கு வந்து அவதிப்படுகிறாயே!'

"'கமல நயன! வாஸுதேவ! விஷ்ணோ! தரணீதர! அச்சுத! சங்கசக்ரபாணே!
நீரே சரணம் என்று சொல்பவர்களை விட்டுவிடு, கிட்டே அணுகாதே” என்று
யமன் தன் தூதனுக்குச் சொன்னான்.

"இதுமுதலான வசனங்களால் ச்ரத்தையும், பக்தியும் இல்லாதபோனாலும்
நாமசங்கீர்த்தனம் ஸகலபாபங்களையும் நாசம் செய்துவிடும்” என்று சொல்லப்பட்டது.

"மனத்தால் நினைத்தே வாயால் பேசுகிறான், எதை  மனத்தால் நினைப்பானோ
அதையே வாயால் பேசுகிறான்” என்ற இரண்டு வாக்கியங்களாலும் ஸ்மரணமும், தியானமும் நாமகீர்த்தனத்துள் அடங்கியது.


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்


http://sribhagavannama.blogspot.in/2013/09/blog-post_7.html